கேரளா கிச்சன் சேர நாட்டின் ஸ்பெஷல் உணவு
நூல்: கேரளா கிச்சன்
சேர நாட்டின் ஸ்பெஷல் உணவு
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
மனிதர்களைப் போலவே உணவுகளுக்கும் வரலாறு உண்டு. ஒவ்வொரு பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கும் சில தனித்துவமான குணங்கள், பண்பாடுகள், கொண்டாட்டங்கள், பழக்க வழக்கங்கள் உண்டு. மண்ணைப் பிரதிபலிக்கும் இந்த பிரத்யேக குணங்களின் வாசம், உணவிலும் தெரியும். நெருப்பைக் கண்டறிந்து, உணவை சமைத்து சாப்பிடும் கலை அறிந்தபிறகே மனித இனம் நாகரிகத்தின் வாசலில் தன் சுவடுகளைப் பதித்தது. உலகில் புழங்கும் மொழிகளை விட அதிகமாக சமையல் பாரம்பரியங்கள் உண்டு. ஒவ்வொரு உணவுக்கும் மனித இனத்தைச் செழுமைப்படுத்திய வரலாறு உண்டு. ‘ஒருவர் உண்ணும் உணவே அவரது குணங்களைத் தீர்மானிக்கிறது’ என்கிறது ஆயுர்வேதம். ‘உணவே மருந்து. சரியாகவும் முறையாகவும் சாப்பிடக் கற்றவர்கள் மருத்துவர்களிடம் போக வேண்டிய அவசியமே இல்லை’ என்பதும் உலகறிந்த உண்மை. வெறுமனே ரெசிபி பார்த்து சமைத்து சாப்பிடுவதைவிட, அந்த உணவு உடலுக்கு எந்த வகையில் அவசியமாகிறது... அதன் வரலாறு என்ன... என எல்லாம் அறிந்து சாப்பிடுவது பயன் தரும். அப்படிப்பட்ட சமையல் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது இந்த நூல். ரெசிபிக்களோடு அழகிய வண்ணப்படங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு.