பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
சமுதாயத்தின் விடிவெள்ளியாம் சமூகநீதிப்போராளி தந்தை பெரியார் ஈரோடு மாவட்டம் வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17-9-1879ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். செல்வச்செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதியப்பாகுபாட்டினை காண சகிக்காமல், சமூக நீதித்தேடி சளைக்காமல் போராடி களத்தில் அவர் பட்ட காயங்களும், அவமானங்களும் ஆயிரமாயிரம்.
இளம் வயதில் பல்வேறு அமைப்புகளில் தலைமை ஏற்றவர் காந்தி மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரசில் இணைந்தாலும் தான் கொண்டிருந்த கொள்கை, லட்சியங்கள் ஈடேறிட வாய்ப்பில்லாது போனதால், அக்கட்சியில் இருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படவும், படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து, விழிப்புணர்வு பெறமுடியும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு, "குடியரசு" வார இதழ் தொடங்கி, சமுதாயத்தில் நிலவிவரும் வருணாசிரமத்தை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டுமே தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவை இரண்டும் அவரது இலக்குகளாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை. அவரின் சுயமரியாதை எனும் சுயசிந்தனையால் தமிழினம் இன்று தலைநிமிர்ந்துள்ளதோடு சிந்தனை தெளிவும் பெற்றுள்ளது. விடாது அவர் இடித்துரைத்த பகுத்தறிவினாலும், விதைக்கப்பட்ட சமூக நீதி கருத்துகளாலும் தமிழகம் தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று நிற்பதோடு மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏக்கத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
தந்தை பெரியாரின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்றுகின்ற வகையில் அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சி பொறுப்பிலே அமர்ந்தபோது 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை' என்று கம்பீரமாக அறிவித்தார். தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதை திருமணச்சட்டம், கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்கப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும் 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு', சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளால் ஆண்டுகள் 143 கடந்தும் இன்றும் நம்மோடும், இனி வரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளாம் செப்டம்பர் 17ஆம் நாளை 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடுவோம்